கோவையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்; ரோலக்ஸ் யானை இல்லாததால் ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் யானைகள் அட்டகாசம்!
கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமப் பகுதிகளில் ஒற்றைக் கொம்பன் காட்டு யானை ஒன்று, குளத்தைத் தூர் வாரிக்கொண்டிருந்த ஜே.சி.பி. இயந்திரத்தை மோதுவதுபோல் சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்த நிலையில், அந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகின்றன.
ரோலக்ஸுக்குப் பிறகு அதிகரித்த அச்சுறுத்தல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தி வந்த ரோலக்ஸ் என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் பராமரித்து வந்தனர்.
ரோலக்ஸ் யானை அப்பகுதியில் இருந்தவரை, ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் என்ற யானைகள் ஊருக்குள் நுழைவதைக் குறைத்துக் கொண்டிருந்தன. ஆனால், ரோலக்ஸ் யானை பிடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பிறகு, அதன் பயம் நீங்கியதால், தொண்டாமுத்தூர், ஆலாந்துறை பகுதிகளில் ஒற்றைக் கொம்பன் யானையும், தடாகம், வரப்பாளையம் பகுதிகளில் வேட்டையன் யானையும் மீண்டும் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
ஜே.சி.பி.யை மிரட்டிய ஒற்றைக் கொம்பன்:
சம்பவ இடம்: கோவை நரசீபுரம், அணைத்தோட்டம், ஈஷா யோகா மையம் செல்லும் வழியில் உள்ள நரசீபுரம் குளம்.
சம்பவம்: தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நரசீபுரம் குளத்தில், இரண்டு ஜே.சி.பி. வாகனங்கள் பணியில் ஈடுபட்டிருந்தன. அப்போது அப்பகுதிக்கு வந்த ஒற்றைக் கொம்பன் யானை, அவற்றில் ஒரு ஜே.சி.பி. இயந்திரத்தை நோக்கி ஆக்ரோஷமாகச் சென்றது.
ஏதோ ஆக்கிரமிப்பு நடப்பதாகக் கருதியோ அல்லது கோபத்தின் காரணமாகவோ யானை மோதும் முனைப்புடன் சென்றதைக் கண்ட அங்கிருந்த பணியாளர் ஒருவர், தனது செல்போனில் அதைப் படம்பிடித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வனவிலங்குகளின் வாழ்விடங்களில் மனிதனின் தலையீடு அதிகரிக்கும்போது இதுபோன்ற அச்சுறுத்தல்கள் ஏற்படுவதாக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
in
தமிழகம்