திரைத்துறையில் பாடகர்கள் குறைந்து வருகின்றனர்; தொழில்நுட்ப வளர்ச்சி ஆரோக்கியமானதே - கிரிஷ் கருத்து!
கோவை: ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, அனிருத் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடி தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் பிரபல பாடகர், நடிகர் மற்றும் இசையமைப்பாளரான கிரிஷ், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இசைத்துறையில் தொழில்நுட்பம் குறித்த முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அவர், இறுதியாக நடிகர் விஜய்யின் படப் பாடல் ஒன்றைப் பாடி அசத்தினார்.
குரல் பயன்பாட்டிற்கு விதிமுறை
இசைத்துறையில் தொழில்நுட்பத்தின் வரவு ஆரோக்கியமானதுதான் என்று கூறிய கிரிஷ், "பெரும் ஜாம்பவான்களின் குரல்களைத் தொழில்நுட்ப ரீதியாகப் பயன்படுத்தும்போது, அதற்குச் சில விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம்" என்று வலியுறுத்தினார். இது, குரல் திருட்டு மற்றும் முறையற்ற பயன்பாட்டைத் தடுக்க உதவும் என்ற நோக்கில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.
பாடகர் எண்ணிக்கை குறைவு
தற்போது திரைத்துறையில் பாடகர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது என்று கிரிஷ் கவலை தெரிவித்தார். படங்களிலும் பாடல்களை விட பின்னிசைக் கோர்வைகளை ரசிகர்கள் ரசிப்பதாகக் கூறினார்.
புதிய வாய்ப்புகள்
புதிய பாடகர்களுக்குத் தற்போது திரைப்படம் மட்டுமே வாய்ப்பு என்று இல்லாமல், சமூக வலைதளப் பக்கங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இசையமைப்புகள் குறித்த கருத்து
ராம்ப் வகைப் பாடல்கள் அதிகரித்து இருந்தாலும், அதுவும் இசையின் ஒரு வகைதான் என்று கூறிய கிரிஷ், "ஆனால், அந்தப் பாடல்களிலும் தெளிவான தமிழ் சொற்களைப் பயன்படுத்துவது தம்மை வியப்பில் ஆழ்த்துவதாகக்" கூறினார்.
புத்தாண்டு நிகழ்ச்சி
கோவையில் லைவ் இன் கான்சர்ட் நிகழ்ச்சிகளை ரசிக்க ரசிகர்கள் அதிகம் இருப்பதாகத் தெரிவித்த அவர், வரும் புத்தாண்டில் புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள 'நம்ம கோவை' நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டு பாட இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


