80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் மாஸ் மேடை! தவெக தலைவர் விஜய்யுடன் அனிருத் மலேசியா பயணம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய், தனது ‘ஜனநாயகன்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்காகத் தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டார். அவருடன் படக்குழுவினர் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் சென்றனர். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மலேசியா புறப்படும் முன்பாகச் செய்தியாளர்கள் அனிருத்திடம் உரையாடினர்.
அப்போது பேசிய அனிருத், “ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சுமார் 80 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மலேசிய ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. நானும் மிகுந்த உற்சாகத்துடனும், மிகப்பெரிய எதிர்பார்ப்புடனும் அங்குச் செல்கிறேன்” எனத் தெரிவித்தார். கோலாலம்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த விழா, விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு வெளிநாட்டில் நடக்கும் முதல் பிரம்மாண்ட சினிமா நிகழ்வு என்பதால் சர்வதேச அளவில் திரைத்துறை வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
பேட்டியின் இறுதியில், “விஜய்யின் அடுத்த படம் குறித்து ஏதாவது அப்டேட் இருக்கிறதா?” எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அனிருத், “விஜய்யுடன் இது எனக்குக் கடைசி வாய்ப்பு” எனக் கூறிவிட்டுச் சிரித்தபடி மின்னல் வேகத்தில் புறப்பட்டுச் சென்றார். நடிகர் விஜய் ஏற்கனவே ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாகவும், இதுவே தனது கடைசிப் படம் என்றும் அறிவித்திருந்த நிலையில், அனிருத்தின் இந்த “கடைசி வாய்ப்பு” என்ற பஞ்ச் வசனம் அதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக அமைந்துள்ளது. அனிருத்தின் இந்த மர்மமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.
