குழந்தை இயேசுவின் பிறப்பை அறிவித்து நள்ளிரவு சிறப்புத் திருப்பலி; போர் அபாயமில்லாத உலக அமைதிக்காகக் கிறிஸ்தவர்கள் உருக்கமான பிரார்த்தனை!
உலகெங்கும் அமைதியையும் அன்பையும் போதித்த இறைமகன் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை முன்னிட்டு, சேலம் மாநகரம் முழுவதும் நேற்று இரவு முதலே விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகத் தீவிர விரதமிருந்து, தினந்தோறும் தேவாலயங்களுக்குச் சென்று இறை வழிபாட்டில் ஈடுபட்டு வந்த கிறிஸ்தவப் பெருமக்கள், இன்று நள்ளிரவு 12 மணி அளவில் குழந்தை இயேசுவின் பிறப்பை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
சேலத்தின் அடையாளமாகத் திகழும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பழமை வாய்ந்த சி.எஸ்.ஐ (CSI) தேவாலயம், நான்கு ரோடு பகுதியில் உள்ள குழந்தை இயேசு பேராலயம், அஸ்தம்பட்டி அடைக்கல அன்னை தேவாலயம் மற்றும் சூரமங்கலம் புனித ஜோசப் பேராலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொலியில் ஜொலித்தன. குறிப்பாக, நான்கு ரோடு குழந்தை இயேசு பேராலயம் முற்றிலும் மின்னொலி அலங்காரங்களால் மக்களை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது அனைவரையும் கவர்ந்தது.
சரியாக நள்ளிரவு 12 மணி அளவில், கிறிஸ்துவின் பிறப்பை உணர்த்தும் வகையில் தேவாலய மணிகள் முழங்கின. அதனைத் தொடர்ந்து, குழந்தை இயேசுவின் உருவச் சிலையைப் பேராலயத்தின் பங்குத் தந்தைகள் சுமந்து வந்து, மாட்டுத் தொழுவத்தில் வைத்துப் பிறப்பை அறிவித்தனர். இந்தப் புனிதத் தருணத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி மற்றும் கூட்டுப் பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தங்கள் வாழ்வு சிறக்கவும், குடும்ப நலன் பெருகவும் வேண்டியதுடன், முக்கியமாக உலக நாடுகள் எவ்வித போர் அபாயமும் இன்றி அமைதியாக வாழ வேண்டும் என உருக்கமாகப் பிரார்த்தனை செய்தனர். வழிபாடுகள் முடிந்ததும் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பகிர்ந்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு கருதி மாநகரின் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.
