அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே துணிகரம்! சிசிடிவி காட்சிகளால் சிக்கிய ‘தன்னார்வலர்’!
சேலத்தின் சக்தி வாய்ந்த தெய்வமாகப் போற்றப்படும் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது, பக்தர் ஒருவர் காணிக்கையாகச் செலுத்திய தங்க நாணயம் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் குரங்குச்சாவடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெண்ணங்குடி முனியப்பன் கோவில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடமும் மிகுந்த செல்வாக்கு பெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோவிலில், நேற்று செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் மொத்தம் 19 லட்சத்து 65 ஆயிரத்து 42 ரூபாய் ரொக்கப் பணம் காணிக்கையாகக் கிடைத்தது.
பணம் எண்ணும் பணியின் போது, உறை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த தங்க நாணயம் ஒன்றை அங்கிருந்த தன்னார்வலர் ஒருவர் எடுத்துள்ளார். அதனைப் பார்த்த மற்றொரு நபர், அந்த நாணயத்தை வாங்கிச் செயல் அலுவலரிடம் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், காணிக்கை குறித்த இறுதிப் பட்டியலில் அந்தத் தங்க நாணயம் கணக்கில் காட்டப்படவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்துத் தகவலறிந்த திருத்தொண்டர் பேரவை தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, செயல் அலுவலரிடம் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதிகாரிகளிடம் இருந்து முறையான பதில் கிடைக்காததைத் தொடர்ந்து, திருத்தொண்டர் பேரவை சார்பில் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போலீசார் கோவிலில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, தங்க நாணயத்தை ஒருவர் எடுப்பதும், அதனை மற்றவர் வாங்குவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்தப் புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ள போலீசார், இதில் அதிகாரிகளுக்குத் தொடர்பு உள்ளதா அல்லது தன்னார்வலர்கள் கைவரிசை காட்டியுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். சக்தி வாய்ந்த முனியப்பன் கோவில் உண்டியலிலேயே நடந்த இந்தத் திருட்டுச் சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

