கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் முதன்மைச் செயலாளர்களாகத் தரம் உயர்வு - தமிழக அரசு அதிரடி!
தமிழக நிர்வாக இயந்திரத்தில் முக்கியப் பங்காற்றி வரும் 14 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் வகையில், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 1995-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளர்களாக (Additional Chief Secretary) தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதில் தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் டி.உதயச்சந்திரன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எம்.ஏ.சித்திக், பொருளாதார மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் ஆர்.ஜெயா, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார், டிட்கோ தலைவர் சந்தியா வேணுகோபால் சர்மா, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் ஒன்றிய அரசுப் பணியில் இருக்கும் ஹிதேஷ் குமார் மக்வானா ஆகியோர் அடங்குவர்.
இதேபோல், 2002-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த 7 அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர்களாக (Principal Secretary) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மனிதவள மேலாண்மைத் துறைச் செயலாளர் சமயமூர்த்தி, முதலமைச்சரின் தனிச் செயலாளர் சண்முகம், பொதுத்துறைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர், சமூக நலத்துறைச் செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி வைத்தியன் உள்ளிட்டோருக்கு இந்த உயர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பதவி உயர்வுகள் அனைத்தும் வரும் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியிலான இந்த மாற்றங்கள் புத்தாண்டில் அரசின் திட்டங்களை விரைவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
