கரூர் துயரம்: தவெக முக்கிய நிர்வாகிகளுக்கு சிபிஐ கிடுக்கிப்பிடி! டெல்லி அலுவலகத்தில் ஆஜராக அதிரடி சம்மன்! Karur Stampede Case: CBI Summons TVK's Leaders

புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 4 பேருக்கு அழைப்பு; 41 பேர் பலியான வழக்கில் விசாரணை தீவிரம்!

கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையைச் சிபிஐ (CBI) முடுக்கிவிட்டுள்ளது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, தவெக-வின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்குச் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, இவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் மாதம் கரூர் முகாம் அலுவலகத்தில் வைத்து இவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது பெறப்பட்ட தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில், கூடுதல் விளக்கங்களைப் பெறவே தற்போது டெல்லிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் மற்றும் இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் ஏதேனும் சதித் திட்டம் உள்ளதா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இந்த விவகாரத்தில் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டுப் பிணையில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தவெக-வின் முன்னணி நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்திலும், விஜய் ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk