ரேஷன் கடைகளில் பொங்கல் டோக்கன்! - ஜனவரி 3-ல் விநியோகம் தொடங்கத் திட்டம்; கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!

2-ம் தேதிக்குள் அச்சடிக்கும் பணிகளை முடிக்க ‘கெடு’; பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம்!

தமிழக மக்களின் பெரும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள ‘பொங்கல் பரிசுத் தொகுப்பு’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், இதற்கான டோக்கன் விநியோகிக்கும் பணியை வரும் ஜனவரி 3-ம் தேதி தொடங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டிய டோக்கன்களை அச்சடித்துத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனப் மண்டல இணைப் பதிவாளர்களுக்குக் கூட்டுறவுத்துறை அதிரடிச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், தடையின்றிப் பொருட்களை விநியோகிக்கவும் இந்த ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

தைப்பொங்கல் திருநாளைத் தமிழக மக்கள் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் நியாய விலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளார். இந்த அறிவிப்பு வெளியானவுடன், ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, முன்கூட்டியே டோக்கன் வழங்கும் பணிகளைத் தொடங்க அரசு விரிவான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வழங்கும் பணியை வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் மண்டல அலுவலகங்கள், வரும் ஜனவரி 2-ம் தேதிக்குள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தேவையான டோக்கன்களை அச்சடித்துத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனக் கூட்டுறவுத்துறை தனது சுற்றறிக்கையில் உத்தரவிட்டுள்ளது. அந்தந்தப் பகுதி ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாக வீடுகளுக்குச் சென்று, பொருட்கள் வாங்குவதற்கான நாள் மற்றும் நேரத்தைக் குறிப்பிட்டு இந்தத் டோக்கன்களை வழங்குவார்கள் எனத் தெரிகிறது.

கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தரமான பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் ரொக்கப் பணமும் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.  ஜனவரி இரண்டாவது வாரத்தில் விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளதால், எவ்விதப் புகாருமின்றி இந்தப் பணிகளை முடிக்கக் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk