திமுக ஊடகங்கள் மடைமாற்றுகின்றன... 2026-ல் விஜய் முதல்வராவது உறுதி! - சிபிஐ விசாரணைக்குப் பின் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆவேசம்!TVK's CTR Nirmal Kumar Slams DMK Media After CBI Interrogation in Delhi

“நாளை மீண்டும் ஆஜராகிறோம்!” - கரூர் விவகாரத்தில் சிபிஐ கேட்ட விளக்கங்களை அளித்த தவெக நிர்வாகிகள்!

கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்பது உலகத்திற்கே தெரியும்; ஆனால் திமுக ஆதரவு ஊடகங்கள் இந்த விசாரணையை அரசியல் ரீதியாகத் திசைதிருப்பப் பார்க்கின்றன எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் இன்று சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ கேட்ட அனைத்து விளக்கங்களையும் அளித்துள்ளதாகவும், கூடுதல் விசாரணைக்காக நாளை மீண்டும் ஆஜராக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 2026-ல் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் அதிரடியாக முழங்கினார்.

கரூரில் தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ (CBI) அனுப்பிய சம்மனை ஏற்று தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் இன்று டெல்லியில் ஆஜராகினர். நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிபிஐ கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் நாங்கள் விரிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளோம். இந்தச் சம்பவம் எதனால் நடந்தது, யார் காரணம் என்பது அந்தப் பகுதியில் இருந்த மக்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றாகவே தெரியும். நாங்கள் சிபிஐ விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சில ஊடகங்கள் இந்த விவகாரத்தைத் திட்டமிட்டுத் திசைதிருப்புவதாகச் சாடினார். “காலையிலிருந்தே திமுக ஆதரவு ஊடகங்கள் இந்த விசாரணையை வேறு மாதிரியாகச் சித்தரித்து வருகின்றன. அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தை மடைமாற்றப் பார்க்கிறார்கள். 33 ஆண்டுகால உழைப்பை மக்களுக்காக அர்ப்பணிக்க எங்கள் தலைவர் விஜய் அரசியல் களத்திற்கு வந்திருக்கிறார். 2026-ல் அவர் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் கோடிக்கணக்கான தமிழ் மக்களின் விருப்பம். அந்த இலக்கிலிருந்து எங்களை யாரும் மடைமாற்ற முடியாது” என ஆவேசமாகத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை ஏற்கனவே சிபிஐ-யிடம் சமர்ப்பித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், விசாரணை இன்னும் நிறைவடையாததால் நாளை காலை மீண்டும் சிபிஐ அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக உள்ளதாகத் தெரிவித்தார். “சிபிஐ கேட்ட கேள்விகள் என்ன என்பதைப் பொதுவெளியில் கூற முடியாது; ஆனால் தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்கிவிட்டோம். மக்களின் விருப்பத்திற்கு மாறாக நாங்கள் எதையும் செய்ய மாட்டோம்” என நிர்மல் குமார் தனது பேட்டியில் உறுதிபடத் தெரிவித்தார். தவெக நிர்வாகிகளின் இந்தத் தொடர் விசாரணை டெல்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk