என் மனைவியை திமுக கைக்கூலி எனச் சித்திரவதை செய்தனர்! – அஜிதா ஆக்னலின் கணவர் குற்றச்சாட்டு!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகி அஜிதா ஆக்னல், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட அவதூறு கருத்துகளால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், தமிழக வெற்றிக் கழகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி அடைந்த அவர், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகம் மற்றும் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, அவர் "திமுக-வின் கைக்கூலி" என்றும், வேண்டுமென்றே கட்சிக் குழப்பத்தை விளைவிப்பதாகவும் சில தரப்பினர் பொய்யான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கடந்த மூன்று நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த அஜிதா, உணவருந்தாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை தனது வீட்டில் சுமார் 15 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த அஜிதாவை அவரது கணவர் ஆக்னல் மற்றும் உறவினர்கள் மீட்டு, உடனடியாக தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அஜிதாவின் கணவர் ஆக்னல் கூறுகையில்: "என் மனைவி மீது சமூக வலைதளங்களில் 'திமுக ஆதரவாளர்' எனப் பொய்யான தகவல்களைப் பரப்பினர். இந்த அவதூறுகளால் மனதளவில் பாதிக்கப்பட்டே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் இன்னும் 3 மணி நேரத்தில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனத் தெரிவித்துள்ளனர்," என்றார்.
அஜிதா ஆக்னல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும், அவரது ஆதரவாளர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணம் ஏற்பட்டால், தமிழக அரசின் உதவி எண்ணான 104 அல்லது சினேகா அமைப்பின் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
.jpg)