அபாயகரமாக வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை! புகாருக்கு புதிய ஹெல்ப்லைன் எண் அறிமுகம்!
கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் சென்னை சாலைகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டியவர்கள் மீது சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை பெருநகரப் போக்குவரத்து காவல்துறை சாலைப் பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்தில்லா பண்டிகையை உறுதி செய்யவும் சிறப்பு வாகனத் தணிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் அதிவேகம் மற்றும் அபாயகரமான வகையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராகச் சிறப்பு ஸ்குவாட்கள் மூலம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் (24.12.2025) கிறிஸ்துமஸ் பண்டிகை தின இரவில், சென்னை மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின்படி நகரம் முழுவதும் முக்கிய சாலைகளில் அதிரடி வாகனத் தணிக்கை நடத்தப்பட்டது. அப்போது பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், ஆபத்தான முறையிலும் பைக் ரேஸில் ஈடுபட்ட 24 வாகனங்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அந்த வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன.
எந்தவொரு பண்டிகையையும் பொறுப்புடன் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தியுள்ள போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும், சாலைகளில் யாரேனும் அபாயகரமான வகையில் வாகனம் ஓட்டுவதைக் கண்டால், பொதுமக்கள் உடனடியாக +91 90031 30103 என்ற உதவி மைய எண்ணிற்கு (Helpline) தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
