இபிஎஸ் உடனான சந்திப்புக்கு பின் கிண்டி ராஜ்பவனில் சந்திப்பு; கூட்டணி மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து விவாதித்ததாகத் தகவல்!
தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், இன்று மாலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து முதற்கட்டப் பேச்சுவார்த்தையை பியூஷ் கோயல் நடத்தினார். அந்தச் சந்திப்பு முடிந்து மாலை 4.50 மணியளவில் ஆளுநர் மாளிகைக்கு வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் எல். முருகன் ஆகியோரும் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தின் சமீபகால முக்கிய நிகழ்வுகள், சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து ஆளுநருடன் அவர் விரிவாக ஆலோசித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 5.30 மணி வரை ஆளுநர் மாளிகையில் இருந்த அமைச்சர்கள் குழு, அங்கிருந்து நேராக சென்னை விமான நிலையம் புறப்பட்டுச் சென்றது. முன்னதாக, சென்னை ஐடிசி (ITC) ஹோட்டலில் தங்கியிருக்கும் பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளைப் பியூஷ் கோயல் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக தமிழிசை சௌந்தர்ராஜன், எச். ராஜா, அஸ்வத்தாமன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஹோட்டலில் காத்திருந்தனர். ஆனால், ஆளுநர் சந்திப்பு முடிந்த கையோடு அமைச்சர்கள் நேரடியாக டெல்லி புறப்பட்டதால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. இந்தத் திடீர் பயண மாற்றம் பாஜக வட்டாரத்தில் ஒருவித சலசலப்பை ஏற்படுத்தினாலும், ஆளுநருடனான சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாகத் தெரிகிறது.
