1987 ஜூலை 1க்கு முன் பிறந்தவர்களுக்குச் சலுகை: இலங்கைத் தமிழ் அகதிப் பெற்றோருக்குப் பிறந்தவருக்கு பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!
திருச்சியில் இலங்கைத் தமிழ் அகதித் தம்பதிக்குப் பிறந்த கோகுலேஸ்வரன் என்ற இளைஞருக்கு இந்தியப் பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை வழங்கியுள்ளது. குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படை விதியைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், மனுதாரருக்கு எட்டு வாரங்களுக்குள் இந்தியப் பாஸ்போர்ட் வழங்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, அகதி முகாமில் பிறந்த இந்தியக் குடிமக்களின் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த மனுதாரர் கோகுலேஸ்வரன், தனக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கக் கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, முக்கியத்துவம் வாய்ந்த சட்ட விவரங்களை எடுத்துக் கூறினார். கோகுலேஸ்வரன் 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்தவர் என்பது அவரது பிறப்புச் சான்றிதழ் மற்றும் திருச்சி மாநகராட்சி வழங்கிய உறுதிப்படுத்தல் சான்றிதழின் மூலம் தெளிவாக நிரூபிக்கப்பட்டது.
அவரது பெற்றோர் இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து திருச்சி அகதி முகாமில் வசித்து வந்ததால், 2024 பிப்ரவரியில் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தபோது, அவர் இலங்கைத் தமிழர் என்பதைக் காரணம் காட்டி, அவரது விண்ணப்பம் நிலுவையில் வைக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், தான் இந்தியாவில் பிறந்ததால், குடியுரிமைச் சட்டம், 1955 பிரிவு 3ன்படி, பிறப்பால் இந்தியக் குடிமகன் எனக் வலியுறுத்தப்பட்டது. இதனை ஆய்வு செய்த நீதிபதி, இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, கடந்த 1987 ஜூலை 1க்கு முன் இந்தியாவில் பிறந்தவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தானாகவே இந்தியக் குடிமக்களாகக் கருதப்படுவார்கள் என்ற சட்டப் பிரிவை மையப்படுத்தினார்.
எனவே, 1986-ல் பிறந்த மனுதாரர், சட்டப்படி 100 சதவிகிதம் இந்தியக் குடிமகன் என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அவரது பிறப்புச் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாகச் சரிபார்க்கப்பட்ட நிலையில், பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதைக் காரணம் காட்டி பாஸ்போர்ட் வழங்க மறுப்பது சட்டத்துக்கு எதிரானது என்று கடுமையாகத் தெரிவித்தது.
இதனையடுத்து, பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு எட்டு வாரங்களுக்குள் மனுதாரருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று காலக்கெடு விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவில் பிறந்த அகதி முகாமில் வசிப்போரின் குழந்தைகள் பெற்ற குடியுரிமை உரிமையைத் தெளிவாக விளக்கும் ஒரு திருப்புமுனைத் தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.
.jpg)