கர்நாடகாவில் பதுங்கி இருந்த பெண் கைது: சென்னை சைபர் கிரைம் போலீஸ் சாதனை!
சென்னை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த மென்பொறியாளர் சுதா கார்த்திக்கிடம், "ஆன்லைன் முதலீட்டில் அதிக லாபம்" என்று ஆசைகாட்டி, சுமார் ₹24.89 லட்சம் பண மோசடி செய்த வழக்கில், தீபா (26) என்ற பெண்ணை சென்னை சைபர் கிரைம் போலீஸார் கர்நாடகாவில் வலை வீசிக் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சுதா கார்த்திக்கை அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, டெலிகிராம் ஐடி மூலம் முதலீட்டுச் சங்கிலியில் ஈடுபடுத்தியுள்ளார். ஆரம்பத்தில் கிடைத்த சிறிய லாபத்தைக் கண்டு நம்பிக்கை ஏற்பட்டு, பல தவணைகளாகச் சுமார் ₹24,89,665-ஐக் குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியதாக அவர் புகார் அளித்திருந்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கிழக்கு மண்டல சைபர் கிரைம் குழு, குற்றவாளிகள் பயன்படுத்திய வங்கிக் கணக்கு, மொபைல் எண், IP முகவரி உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பகுப்பாய்வு செய்தது.
இந்தப் பகுப்பாய்வில் மோசடியில் ஈடுபட்டவர்கள் கர்நாடகாவில் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார், பதுங்கி இருந்த தீபா என்ற பெண்ணை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட தீபாவிடம் இருந்து சுமார் ₹24 லட்சம் பணமும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
