தாக்குதலில் 9 பேர் பலி, பலர் படுகாயம்; ஹரியானாவில் வெடிமருந்து பறிமுதலுக்குப் பின் நடந்ததால் பயங்கரவாதக் கோணத்தில் விசாரணை.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற ஒரு கார் குண்டுவெடித்துச் சிதறிய சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் எண் 1 அருகே இன்று மாலை இந்தச் சக்திவாய்ந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவம் நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை (NIA) மற்றும் காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லி முழுவதும் ராணுவத்தினர் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய ரயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் வெளியேறும் பயணிகளின் உடைமைகள் முழுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. மாநகர போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் இணைந்து, ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனையையும் மேற்கொண்டுள்ளனர். மும்பையிலும் பாதுகாப்பு: மும்பையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை ஹரியானாவில் சுமார் 3,000 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இந்தச் சம்பவம் நடைபெற்றதா? இது பயங்கரவாதத் தாக்குதலா? என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையைத் தொடங்கி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களையும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
