இந்தியா vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: பும்ரா 5 விக்கெட்.. முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 159-க்கு ஆல் அவுட்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் அனல் பறக்கத் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கைத் தேர்வு செய்ய, அதுவே அவரது அணிக்குப் பேரிடியாக அமைந்தது.
தொடக்க வீரர்கள் மார்க்ரம் (31) மற்றும் ரிக்கல்டன் (23) நிதானமாகத் தொடங்கினாலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் வேகப்பந்து வீச்சில் விக்கெட்டுகள் சரசரவென விழத் தொடங்கின.
பும்ராவின் மாயாஜாலப் பந்துவீச்சில் அந்த அணியின் முன்னணி வீரர்கள் பலர் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க நேர்ந்தது. கேப்டன் பவுமா (3 ரன்) குல்தீப் யாதவின் சுழலில் சிக்கினார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து திணறிய தென் ஆப்பிரிக்க அணி, 55 ஓவர்களில் வெறும் 159 ரன்களுக்கு சுருண்டது. இந்தியத் தரப்பில் மிரட்டலாகப் பந்து வீசிய ஜஸ்பிரித் பும்ரா தனியொரு ஆளாய் 5 விக்கெட்டுகளை வேட்டையாடினார். முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ராவுக்குப் பலம் சேர்த்தனர்.
எளிதான இலக்கைத் துரத்தி இந்தியா தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 12 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து துணையாகக் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தருடன், கே.எல். ராகுல் இணைந்து நிதானமாக ஆடி விக்கெட் இழப்பைத் தடுத்து நிறுத்தினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல். ராகுல் 13 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் நாள் ஆட்ட நாயகனாக பும்ரா முத்திரை பதித்தார்.
