வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு: நவம்பர் 18 வரை தமிழகத்தில் தொடரும் கனமழை!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால், வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதன் தாக்கம் காரணமாகத் தென் மாவட்டங்களில் மழை மேலும் வலுப்பெற்று வரும் நிலையில், இன்று இரவு 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.கடந்த நவம்பர் 11, 2025 அன்று இரவு தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், நீர்நிலைகள் தொடர்ந்து நிரம்பி வரும் சூழலில், வானிலை ஆய்வு மையம் இன்று இரவு 10 மணி வரை அமலில் இருக்கும் ஒரு புதிய எச்சரிக்கையைவெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று (நவம்பர் 12, 2025) இரவு 10 மணி வரை தமிழ்நாட்டின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால், அம்மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பும் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.மழைத் தொடர் நிலவரப்படி, நவம்பர் 13 முதல் 15, 2025 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 17, 2025 அன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், நவம்பர் 18, 2025 அன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மிதமான மழை பெய்யவும், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் பகுதியளவில் மேகமூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதிகளில் லேசானது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 - 33°C ஆகவும், குறைந்தபட்சம் 26°C ஆகவும் இருக்கும்.
