பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாடல்!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இன்று காலை 11:30 மணி நிலவரப்படி, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 190-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிப்பதால், இந்தியா கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையம் மற்றும் பா.ஜ.க. மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் பின்னடைவு: இரு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், இந்தியா கூட்டணி கடுமையான சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக, இந்தியக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் போட்டியிட்ட ரகோபூர் தொகுதியிலும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அங்கு பா.ஜ.க. வேட்பாளர் சதீஷ் குமார் 3,000-க்கும் அதிகமான வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.
பவன் கேராவின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: மெகா கூட்டணியின் இந்தச் சரிவைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கேரா, பா.ஜ.க. மற்றும் தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். அவர் கூறியிருப்பதாவது,
"பீகார் மக்களை நான் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தைரியத்தைக் காட்டியுள்ளனர். எஸ்.ஐ.ஆர். வாக்குத் திருட்டு இருந்தபோதிலும் அவர்கள் தைரியத்தைக் காட்டியுள்ளனர். இந்தக் போட்டி நேரடியாக இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் பீகார் மக்களுக்கும் இடையே உள்ளது.
மேலும், "பா.ஜ.க.வுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. எஸ்.ஐ.ஆர் மூலம் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்கும் 65 லட்சம் பேரை நீக்கியபின் என்ன முடிவை எதிர்பார்க்க முடியும்? ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே வெற்றியாளரை அறிவித்துவிட்டால் ஜனநாயகம் எப்படிப் பிழைக்கும் ?" என்று பவன் கேரா மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார்.
