நவம்பர் 26 வரை கனமழை நீடிக்கும்: 22ஆம் தேதி உருவாகும் தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் – வானிலை ஆய்வு மையம் தகவல்.
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் வரும் 26 ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிகபட்சமாக நேற்று தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் நவம்பர் 22ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 24ஆம் தேதி வாக்கில் தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தச் சூழலால், இன்று கடலோரத் தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று நள்ளிரவு 1 மணி வரை திருவாரூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் ஆகிய 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, நாளை (நவ. 21) தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 11 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் (நவ. 22) இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கான வாய்ப்பு நிலவுகிறது.
தலைநகர் சென்னையைப் பொறுத்தவரையில், நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31C-ஐ ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24C-ஐ ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
