மண்டல பூஜை சீசன் நவம்பர் 17-ல் தொடக்கம்; ஆற்றில் நீராடும்போது மூக்குக்குள் நீர் செல்லாமல் பார்த்துக்கொள்ள கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
கேரளாவில் வருகிற நவம்பர் 17, 2025 அன்று சபரிமலை மண்டல பூஜை சீசன் துவங்க உள்ள நிலையில், அங்கு மூளையைத் தின்னும் அமீபா (Brain Eating Amoeba) பரவி வருவதால், கேரளா சுகாதாரத் துறை பக்தர்களுக்கு முக்கியமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், இந்த மருத்துவ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நெக்லேரியா ஃபவ்லேரி (Naegleria fowleri) என்றழைக்கப்படும் மூளைத் தின்னும் அமீபா, நீரின் வழியாக மூக்கிற்குள் நுழைந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயம் இருப்பதால், ஆற்றில் நீராடும் பக்தர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஆற்றில் நீராடும் பக்தர்கள், நீரில் மூழ்கும் போது நீர் மூக்கிற்குள் செல்லாதவாறு நன்றாக மூக்கை மூடிக் கொள்ள வேண்டும்.
பயணத்தின்போது காய்ச்சி வடிகட்டிய நீரையே குடிக்க வேண்டும்.
வேகமாகக் கெட்டுப்போகும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
கழிப்பறைக்குச் சென்ற பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.
திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
யாத்திரைக்கு முன் லேசான நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
மலை ஏறும் போது அவ்வப்போது ஓய்வெடுத்து மெதுவாகச் செல்ல வேண்டும்.
மார்பு வலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவ மையத்தை அணுக வேண்டும்.
மேலும், பாதயாத்திரை செல்லும் வழியில் காட்டுப் பகுதிகள் உள்ளதால் பாம்புகள் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்காக மருத்துவமனைகளில் விஷ முறிவு மருந்துகள் போதுமான அளவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் அவசரகாலத் தேவைக்காக 04735 203232 என்ற உதவி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. கோட்டயம், பாத்தனம்திட்டா முதல் சன்னிதானம் வரை மருத்துவர்களின் அணிகள் பிரிக்கப்பட்டு 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
