ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு ஜாமீன்: ஆம்ஸ்ட்ராங் மனைவி எதிர்ப்பு தள்ளுபடி!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அஸ்வத்தாமன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு (2024) அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் பிரபல ரவுடி நாகேந்திரன், அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 29 பேர் மீது காவல்துறை குற்றம் சாட்டினர். இதில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இருவர் இதுவரை தலைமறைவாக உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு காரணமாக முக்கிய குற்றவாளி நாகேந்திரன் மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வத்தாமன், அஞ்சலை, பிரதீப் உள்ளிட்ட 14 பேர் தாக்கல் செய்த மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடையீடடு மனு தாக்கல் செய்திருந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இத்தரப்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதாகவும் நீதிமன்றம் விதிக்கின்ற நிபந்தனைகள் ஏற்க தயாராக இருப்பதாகவும் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகும் தற்பொழுது தீர்ப்பளித்த நீதிபதி எஸ். கார்த்திகேயன், பல்வேறு நிபந்தனைகளுடன் குற்றம் சாட்டப்பட்ட அஸ்வத்தம்மன், அஞ்சலை, பிரதீப், ராஜேஷ், நூர் என்ற விஜயகுமார், குமார் என்ற செந்தில் குமார், கோபி, விக்னேஷ் என்ற அப்பு, முகிலன் உள்ளிட்ட 12 பேருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குவதாகவும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும் சாட்சிகளை கலைக்க கூடாது விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட கோகுல் மற்றும் ஹரிஹரன் இருவரின் ஜாமீன் மனுகளை தள்ளுபடி செய்தாக நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
