வழக்கறிஞர் ராஜீவ் காந்தி அளித்த அதிரடி மனு: விசிக தலைவர் திருமாவளவன் மீதும் நடவடிக்கை கோரிக்கை!
விசிக தலைவர் திருமாவளவனின் கார் மற்றும் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியின் இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக, காவல்துறையையும் தாக்கிய விசிக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜீவ் காந்தி இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிய புகார் மனுவை அளித்தார்.
கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே இந்த விபத்து நிகழ்ந்தபோது, விசிக நிர்வாகிகள் சிலர் தன்னைத் தாக்குதல் நடத்திய வீடியோக்கள் வைரலானதால் ஏற்கெனவே இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்த நிலையில், புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜீவ் காந்தி, அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அதைக் கடுமையாகத் தடுக்க வந்த காவல்துறை ஆய்வாளர் மீதும் விசிகவைச் சேர்ந்த நபர்கள் தாக்குதல் நடத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், இந்தத் தாக்குதலுக்கு உறுதுணையாக இருந்த விசிக தலைவர் திருமாவளவன் மீதும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதேர்ச்சையாக நடந்த சாதாரண விபத்துக்குப் பின்னும், தன் மீது தாக்குதல் நடத்தியதோடு மட்டுமல்லாமல், தனக்குத் தொடர் மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். காவல்துறை அதிகாரிகள் அனைத்து சிசிடிவி காட்சிகளையும் முறையாக ஆய்வு செய்து பார்த்தாலே, சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்ற உண்மை வெளிவரும் எனவும் ராஜீவ் காந்தி தெளிவுபடுத்தினார்.
