ஜனநாயகத்தின் ஆணிவேரை அசைக்கும் முயற்சி.. SIR வாக்காளர் திருத்தத்தைக் கண்டித்து தவெக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!
வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் இன்று மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்று, ஆளும் கட்சிக்குச் சாதகமான அரசியல் சூழ்ச்சி நடப்பதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உட்பட 8 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் ஏராளமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழப்பார்கள் என்று கூறி, தமிழகத்தில் திமுக, அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே வலியுறுத்தியிருந்தார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தவெகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரசார நிர்வாகப் பிரிவின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "இன்று விஜய் ஆணைப்படி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. நாம் போராடுவது சாதாரண கோரிக்கைக்காக அல்ல. நமது நாட்டின், நமது மாநிலத்தின் ஜனநாயகத்தின் ஆணிவேரையே அசைத்துப் பார்க்கும் மாபெரும் விஷயத்துக்காக நமது குரலை பதிவு செய்யக் கூடியிருக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பவர்களின் பெயர்களை முன்னறிவிப்பு இன்றி கூட்டம் கூட்டமாகக் நீக்கப்படுகிறது என்று மக்கள் நம்மிடம் கூறுகிறார்கள். வீடு மாறி சென்றுவிட்டதாகவோ, இறந்து விட்டதாகவோ கூறி உயிருடன் இருக்கும் குடிமகனின் வாக்குரிமையைப் பறிப்பது என்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்.
கள்ள ஓட்டு போடுவதற்காக ஒரே நபர்களின் பெயர்கள் கூடுதலாகச் சேர்க்கப்படுவதாகச் சொல்கிறார்கள். இது நேர்மையாகத் தேர்தலை நடத்த ஆட்சியாளர்களுக்கு விருப்பம் இல்லை; அதிகாரத்தின் துணையோடு குறுக்கு வழியில் வெல்லத் துடிக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.
படித்தவர்களே விண்ணப்பங்களை நிரப்ப சிரமப்படுகிறார்கள். அப்படியென்றால் பாமர மக்கள் என்ன செய்வார்கள்? நாம் கேள்வி கேட்க யாரிடமும் முறைவான, தெளிவான பதில் இல்லை. சர்வர் பிரச்சினை என்கிறார்கள். தொழில்நுட்பப் பிரச்சினை என்கிறார்கள். இது கோளாறு அல்ல; குளறுபடி. இது அலட்சியம் அல்ல; ஆளும் கட்சிக்குச் சாதகமான அரசியல் சூழ்ச்சி என்று அவர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இந்த நடவடிக்கையால் பழைய வாக்காளர்கள் முதல் புதிய வாக்காளர்கள் வரை அனைவருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், SIR நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
