செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு: மோடி, ஸ்டாலின், நிர்மலா சீதாராமன் உட்பட தலைவர்கள் இரங்கல்.. தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த EPS வலியுறுத்தல்!
டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்துச் சிதறிய கோரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தேசிய அளவில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தலைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள், "டெல்லியில் நடந்த துயரமான குண்டுவெடிப்பு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முக்கிய ரயில் நிலையங்களும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று உறுதி அளித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது இரங்கல் செய்தியில், டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் பல பேர் உயிரிழந்தது அதிர்ச்சியும் ஆழ்ந்த வேதனையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன், காயமடைந்தவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், இந்தத் துயரச் செய்தி மனவேதனையையும் கவலையையும் அளிப்பதாகவும், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் வெடிவிபத்துக்கு இரங்கல் தெரிவித்ததுடன், சூழ்நிலையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசும் காவல்துறையும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் முக்கியத் தலைவர்களின் இந்த இரங்கல் செய்திகள், ஒட்டுமொத்த தேசமும் இந்தச் சோகச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதை உணர்த்துகிறது.
