SIR பணிகளை எப்படியாவது நிறுத்த திமுக சதி; சந்தர்ப்பவாத அரசியலை பிஹார் மக்கள் புறக்கணித்தனர் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) குறித்துப் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்தச் சிறப்புத் திருத்தம் மூலம் தமிழகத்தில் போலியாகச் சேர்க்கப்பட்ட சுமார் 60 லட்சம் வாக்குகள் வரை நீக்கப்படலாம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். SIR பணிகளை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு காரணங்களைக் கூறி வருவதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைபெற்று வரும் இந்தப் பணிகளுக்கு ஒரு மாத காலம் போதுமானதுதான் என்று ஆணித்தரமாகக் கூறினார். மேலும், முறைகேடாக வாக்காளர்களைச் சேர்ப்பது திமுகவுக்குக் கைவந்த கலை என்று விமர்சனக் கணைகளைத் தொடுத்தார். சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் காங்கிரஸ் கூட்டணியைப் பொதுமக்கள் பிஹார் சட்டசபைத் தேர்தலில் சரியான பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றம் சென்றிருப்பதைக் கடுமையாகச் சாடிய அவர், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் என்பது எந்தக் கட்சி என்றும் பார்க்காமல், நேர்மையான முறையில் வாக்காளர்கள் இடம் பெறும் வகையில் நடைபெற வேண்டும்" என்று வலியுறுத்தினார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் அதிமுக நீதிமன்றம் சென்றதால் 31,000 வாக்குகள் நீக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், "ஒரு தொகுதியில் இவ்வளவு வாக்குகள் என்றால், அனைத்துத் தொகுதிகளுக்கும் சேர்த்து 60 லட்சம் வாக்குகள் கூட வரலாம்" என்று தெரிவித்தார்.
ஆடத் தெரியாதவன் கூற்று போல, SIR மூலம் சதி செய்து பிஹாரில் ஜெயித்தார்கள் என்று அவர்கள் கூறுவது சரியல்ல என்று மறுத்த அவர், அப்படி முறைகேடாக வாக்காளர்களைச் சேர்க்க முடிந்தாலும், அவர்களை வாக்களிக்க வைக்க முடியாது என்று விளக்கமளித்தார். ஆனால், SIRக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர் தான், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் (BLO) அதிகமாகச் சென்று இப்பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.
