₹214 கோடியில் பணிகள் நிறைவு; இம்மாத இறுதியில் முதல்வர் திறந்து வைக்கிறார் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி!
கோவையில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்காவின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இன்னும் ஒரு வாரத்தில் முழுப் பணிகளும் முடிந்து, இம்மாத இறுதிக்குள் பூங்காவைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முதல்வர் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
பூங்காப் பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், ஆரம்பத்தில் ₹167.25 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கூடுதலாக ₹47 கோடி வழங்கப்பட்டு மொத்தம் ₹214.25 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெளிவுபடுத்தினார். தற்போது பிளே ஏரியா, வாட்டர் கார்டன் உள்ளிட்ட நான்கு பணிகள் மட்டுமே பாக்கியுள்ளன என்றார். பூங்காவில் மரங்கள் வைக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், அரிதான மரங்கள் நடப்பட்டுள்ளதாகவும், ஆயிரம் வகை ரோஜாக்கள் மற்றும் உலகில் இல்லாத வகை பூக்கள், செடிகள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் பெருமிதத்துடன் கூறினார்.
துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தரம் குறித்த கேள்விக்கு, முதல்வர் காலை ஆறு நலத்திட்டங்களை அறிவித்திருப்பதாகவும், ₹17 லட்சம் மதிப்பிலான வீடு, மூன்று வேளை உணவு, மருத்துவ வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், இது இந்திய அளவில் எடுக்க வேண்டிய முடிவு என்றும் விளக்கம் அளித்தார்.
அரசியல் களத்தின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், பிஹார் தேர்தல் வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்கும் என பாஜக கூறியதை நகைச்சுவையாக நிராகரித்து, "பாஜக வேறு என்ன சொல்வார்கள்? தேர்தலில் ஜெயிப்பது நாங்கள்தான்; அதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம்" என்று சவால் விடுத்தார். தவெக தலைவர் விஜய், ‘யாரும் ஓட்டு போட முடியாத நிலை வரும்’ என்று எழுப்பிய அச்சத்திற்குப் பதிலளித்த அவர், "வாக்காளர் பட்டியலில் குளறுபடி இல்லை. 68,000 பணியாளர்கள் மூலம் 90% விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஓட்டு சேர்ப்பதற்கான முயற்சிகளை அரசு தீவிரமாகச் செய்கிறது" என்றார். SIR படிவங்களை திமுக சுருட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், தங்கள் வேலை விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்வதுதான் என்றும் விமர்சனக் கணைகளைத் திருப்பினார்.
கோவையில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும், சின்னவேடம்பட்டி ஏரியில் நல்ல நீரைத் தேக்க ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.
