தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு; சென்னை, செங்கல்பட்டு உட்பட கடலோர மாவட்டங்கள் உஷார்!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவம்பர் 16) காலை 8.30 மணி அளவிலும் அதே பகுதிகளில் நிலைகொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என கணித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை (நவம்பர் 17) 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 16) மழை நிலவரம்: இன்று கடலோரத் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நாளை (நவம்பர் 17) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மாவட்டங்கள்:
கடலோரத் தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால், சென்னை வானிலை மையம் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களாகக் கீழ்க்கண்டவற்றை அறிவித்துள்ளது.
சென்னை
செங்கல்பட்டு
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
மயிலாடுதுறை
நாகப்பட்டினம்
திருவாரூர்
இவை தவிர, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மிதமான முதல் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
.jpg)