நவம்பர் 17-ல் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் நவம்பர் 20-க்கு மாற்றம்; திமுக முறைகேடுகளுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் (SIR) ஆளும் திமுக அரசு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், தேர்தல் ஆணையத்தின் பணிகளை தடுக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டி, ஒருங்கிணைந்த சென்னை மாவட்டங்களின் சார்பில் நவம்பர் 17, 2025 அன்று திங்கட்கிழமை நடத்தப்படவிருந்த பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் நவம்பர் 17 அன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பையும், போராட்டத்தில் பங்கேற்கவிருக்கும் நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் சிரமத்தையும் கருத்தில் கொண்டு, போராட்டத்தை ஒத்திவைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் நவம்பர் 20, 2025 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு, அதே இடமான எழும்பூர் ருக்மணி லக்ஷ்மிபதி சாலையில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்கா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
ஆளும் திமுக அரசு ஒருபுறம் SIR பணிகளைத் தடுக்க முயல்வதாகவும், மறுபுறம் திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்தி SIR பணிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதிமுக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த SIR குளறுபடிகளைக் கண்டித்து, முன்னதாக, நவம்பர் 16, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாகவும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்றன. அக் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட வீடியோவில், SIR பணிகள் நீடித்தால் மக்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.
