அமலாக்கத்துறை, சிபிஐ விசாரணைகள் கூட்டணியை அசைக்க முடியாது; விஜயுடன் காங்கிரஸ் கூட்டணி என்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி – தொண்டர்கள் உற்சாகம்!
இந்திய அளவில் அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக இந்தியா கூட்டணி உடைகிறதா என்ற யூகங்கள் மற்றும் வதந்திகள் நிலவி வந்த நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று, "இந்தியா கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது, இது வலிமையான கூட்டணி" என்று உறுதி முழக்கம் விடுத்துள்ளார். மேலும், கூட்டணி குறித்து மிக முக்கிய அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
பிரபல பத்திரிகையாளர் செந்தில் வேல் எழுதிய "திராவிடம் 2.0 ஏன்?" என்ற புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னை சர் பிட்டி தியாகராயர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது உரையில் அரசியல் நிலவரம் குறித்து தீவிரமாகப் பேசினார்.
அவர் பேசுகையில், அந்தக் காலத்தில் வட இந்தியாவில் இருந்து படையெடுப்புகள் வந்தது போல, இன்று அமலாக்கத்துறை (ED), சிபிஐ (CBI) வடிவில் மத்தியில் ஆளும் சக்திகள் வருகின்றன. என்ன வந்தாலும் தமிழர்கள் அதை எதிர்த்து வெற்றி பெறுவார்கள் என்றும் அவர் ஆணித்தரமாகக் கூறினார். மேலும், இந்தியா கூட்டணியை உடைக்கப் பலர் தீவிரமாக முயற்சிப்பதாகவும் , ஆனால் அந்தக் கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது என்றும், அதற்கான முக்கிய அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுப் பேசினார்.
கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்கவிருப்பதாகவும் அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தன. இந்த யூகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்தியா கூட்டணியின் வலிமையைத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று மீண்டும் வலுப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்தப் பேச்சு, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
