2026-ல் திமுக, தவெக-வுக்கு மட்டுமே போட்டி: வன்ம அரசியலை சட்டப்படி துடைத்தெறிவோம் – மாமல்லபுரம் பொதுக்குழுவில் விஜய் அதிரடி!
கரூரில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த (Karur Stampede) துயரச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய் (TVK Vijay) இன்று (நவம்பர் 5) பொதுவெளியில் முதல்முறையாகப் பேசியுள்ளார். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தவெக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தி.மு.க. அரசு மீது வன்ம அரசியல் மற்றும் உண்மைக்குப் புறம்பான செயல்பாடுகள் குறித்துச் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
முதலில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த விஜய், அமைதி காத்ததற்கான காரணத்தைக் கூறினார். என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும், தோழிகளுக்கும் தமிழக மக்களுக்கும் வணக்கம். நம்ம குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையிலும், வலியிலும் இருந்தோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நம் சொந்தங்களில் மனதிற்கு ஏற்ப இருக்க வேண்டியது நமது கடமை. அதனால்தான், அவர்களுடன் சேர்ந்து அமைதி காத்து வந்தோம். இப்படி அமைதியாக இருந்த நேரத்தில் வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் இப்படி நம்மைப் பற்றிப் பரப்பப்பட்டன. இதையெல்லாம், சத்தியம் மற்றும் சட்டத்தின் வழியில் துடைத்து எறியப்போகிறோம். கரூர் சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசிய கருத்துக்களை விஜய் கடுமையாக விமர்சித்தார்.
கடந்த 50 ஆண்டுகளாகப் பொது வாழ்க்கையில் இருக்கும் முதல்வர் சொன்னது எவ்வளவு பெரிய வடிகட்டிய பொய், சப்பை கட்டு என்று நான் சொல்லவில்லை உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடும். நியாயமான விசாரணை மூலமே இந்தச் சந்தேகத்தை மீட்டெடுத்தாக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதலமைச்சர் மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை எனக் கூறி வன்ம அரசியல் செய்கிறார்கள். அரசியல் காழ்ப்புடன், நேர்மை இல்லாமல் குறுகிய மனதுடன் வடிகட்டிய பொய்யை சட்டமன்றத்தில் முதலமைச்சர் பேசினார். விஜய் மேலும் பேசுகையில், தவெக-வுக்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, தி.மு.க. அரசின் நடவடிக்கைகளுக்குக் கேள்வி எழுப்பினார்:
இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் இல்லாத அதிகக் கட்டுப்பாடு நமது தவெக கட்சிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. பிரச்சார நேரத்தின்போது பரப்புரை வாகனத்திற்குள் மட்டும்தான் இருக்க வேண்டும், மக்களைப் பார்த்துக் கையசைக்கக் கூடாது, பேருந்து மேலே ஏறக்கூடாது எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
பொய் மூட்டைகளையும், அவதூறுகளையும் அவிழ்த்து விட்டு, கோடிகளைக் கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களுக்கும், கபட நாடக தி.மு.க. அரசின் தில்லுமுல்லுகளைத் தாக்குப்பிடிக்க இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் நின்றதை மக்கள் அறியாமலா இருப்பார்கள்.
கரூர் சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாக ஒரு தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தத் தனிநபர் ஆணையத்தையே அவமதிப்பது போல், அரசு உயர் அதிகாரிகள் காவல் துறை உயர் அதிகாரிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு செய்தியாளர் சந்திப்பு... இவை எல்லாம் ஏன் நடக்கிறது எதற்காக நடக்கிறது என்று ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் கேள்வி எழுப்பத் தொடங்கினார்கள் என இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் மறந்துவிட்டாரா?
இறுதியாக, 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தனது தொண்டர்களுக்கு விஜய் உற்சாகமூட்டினார். இப்பொழுதும் சொல்கிறேன் 2026 -ல் இரண்டே இரண்டு கட்சிக்குத் தான் போட்டியே ஒன்று தவெக இன்னொன்று திமுக. இந்த போட்டி இன்னும் பலமாக மாறப்போகிறது. நூறு சதவீதம் வெற்றி நமக்கே, வாகை சூடுவோம், வரலாறு படைப்போம், நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.
