கோவையில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: மாணவி வன்கொடுமைக்கு மது, கஞ்சாவே காரணம் – எஸ்.பி. வேலுமணி ஆவேசம்!
கோவையில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக, ஆளும் கட்சியினர் BLA2 படிவங்களைப் பெறுவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி. அருண்குமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தி.மு.க. அரசு மீதும், காவல்துறையின் செயல்பாடு குறித்தும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். BLO அதிகாரிகள் (Booth Level Officers) வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் மனுப் படிவங்களை (SIR கீழ்) கொடுத்து வருகின்றனர். ஆனால், அந்த மனுக்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் மக்களிடம் இருந்து திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம்.
பல BLA ஏஜெண்ட்டுகள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். அவர்கள் அவர்களுக்குச் சாதகமான மனுக்களை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றைத் தூக்கி வீசி விடுவதாகத் தகவல் வெளியாகிறது. எனவே, அதிகாரிகள் தான் படிவங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
பல இடங்களில் கூலி வேலைகளுக்குச் செல்வோர் வேலை முடிந்து 6 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வருவார்கள். எனவே அதிகாரிகள் 6 மணிக்கு மேலும் வீடு வீடாகச் சென்று இந்த வாக்குப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். சில இடங்களில் அதிகாரிகளுடன் சென்று தி.மு.க-வினர் நோட்டீஸ் வழங்குகிறார்கள். எனவே, நடுநிலைமையுடன் இந்தப் பணிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். வாக்குகளைச் சேர்ப்பது நீக்குவது போன்ற பணிகளை தி.மு.க. எப்பொழுதும் செய்வார்கள்.
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்துப் பேசிய எஸ்.பி. வேலுமணி, காவல்துறையின் செயல்பாட்டை கடுமையாகச் சாடினார். இதுபோன்ற ஒரு சம்பவம் கோவையில் நடந்திருக்கக் கூடாது. காவல்துறை இதில் கோட்டை விட்டுவிட்டது. ரோந்துப் பணிகளைப் போலீசார் மேற்கொள்வதே இல்லை. இதுபோன்ற சம்பவத்திற்குக் முக்கிய காரணம் எங்கு பார்த்தாலும் மதுக் கடைகள் இருப்பதும் கஞ்சா விற்பனையும் தான்.
எடப்பாடியார் ஆட்சியில் கோவையில் ஆர்.எஸ். புரம் போலீஸ் ஸ்டேஷன் 'நம்பர் ஒன் போலீஸ் ஸ்டேஷன்' என விருதுகள் வாங்கினார்கள். அம்மா (ஜெயலலிதா) ஆட்சியிலும் எடப்பாடியார் ஆட்சியிலும் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆனால், தற்போது காவல்துறையினர் கைகள் கட்டப்பட்டுள்ளது என்ற சூழல் தான் உள்ளது என்று விமர்சித்தார்.
காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். இனி இதுபோன்ற தவறுகள் ஏற்படக் கூடாது. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும், ஆனால் அவர்கள் உண்மையான குற்றவாளிகளாக இருக்க வேண்டும்.
காவல்துறை பொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள். எனவே, யாருக்கும் அடிபணியாமல் நடுநிலைமையோடு மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்து இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மது, கஞ்சா ஆகியவற்றை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், அப்பொழுதுதான் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது. மேலும், தி.மு.க. ஆட்சியில் கோவை மாவட்டத்திற்குக் எந்தத் திட்டங்களும் கொடுக்கப்படவில்லை என்றும், சட்டம் ஒழுங்கும் சரி இல்லாமல் இருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
