தூங்கிக்கொண்டிருந்தபோது மின்கசிவால் விபத்து: மருத்துவர், மகன், மகள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணா நகரில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மின்கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஓய்வுபெற்ற அரசு மருத்துவரின் மனைவி சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் ஆனந்த் பிரதீப். இவர் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஷாஷி பாலா (58), மகன் ரோகித் ஆனந்த் (23) மற்றும் மகள் பூஜா ஆனந்த் ஆகியோர் வீட்டில் இருந்தனர்.
இன்று அதிகாலை, குடும்பத்தினர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்கசிவு ஏற்பட்டுத் தீவிபத்து நிகழ்ந்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீ வேகமாகப் பரவியதில், ஷாஷி பாலா (58) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அக்கம்பக்கத்தினர் உடனடியாகச் செயல்பட்டு, தீக்காயமடைந்த ஆனந்த் பிரதீப், அவரது மகன் ரோகித் ஆனந்த், மகள் பூஜா ஆனந்த் ஆகிய மூவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீ விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஷாஷி பாலாவின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
