சீனா, ரஷ்யாவுக்குப் போட்டியாகத் திட்டங்கள் மேம்படுத்தப்படும்: அமெரிக்காவின் நீண்டகாலப் பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம்!
சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இணையாகத் தங்களது அணு ஆயுதத் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுதச் சோதனைகள் தொடங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம், கடந்த 34 ஆண்டுகளாக அமெரிக்கா கடைப்பிடித்துவந்த நீண்டகாலப் பாதுகாப்புக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கைச் சந்திப்பதற்குச் சிறிது நேரத்திற்கு முன்பு ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் பின்வருமாறு தெரிவித்தார்.
மற்ற நாடுகள் சோதனைகளை மேற்கொள்வதால், அவர்களுக்கு இணையாக நமது அணு ஆயுதச் சோதனைகளைத் தொடங்க வேண்டும் என்று நான் போர்துறைக்கு அறிவுறுத்துகிறேன்.re
அமெரிக்காவிடம் மற்ற நாடுகளைவிட அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாகவும், ரஷ்யா இரண்டாம் இடத்திலும், சீனா மூன்றாம் இடத்திலும் இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
அதேவேளை, சீனாவின் அணு ஆயுதத் திட்டம் “ஐந்து ஆண்டுகளுக்குள் சமமாகிவிடும்” என்றும் அவர் எச்சரித்தார். ரஷ்யா சமீபத்தில் அணுசக்தியால் இயக்கப்படும் ஏவுகணையைச் சோதித்ததாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், இன்று அமெரிக்கா சோதனை செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கடைசியாக 1992ஆம் ஆண்டு அணு ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டது. அதன் பின்னர், பனிப்போர் முடிவடைந்த நிலையில், குடியரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தினார். தற்போது ட்ரம்பின் இந்த அறிவிப்பு, அந்த நீண்டகாலக் கொள்கையை மாற்றும் வகையில் அமைந்துள்ளது.
இந்தச் சோதனை எப்படி நடைபெறும் என்பதைக் குறித்து ட்ரம்ப் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தச் செயல்முறை உடனடியாகத் தொடங்கும் என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த முடிவு உலக அளவில் ஆயுதப் போட்டியை மீண்டும் தூண்டிவிடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
