தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடிக்கின்றன!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "விஜயை கூட்டணியில் சேர்ப்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அமித் ஷாவிடம், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துகிறதா?" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அமித் ஷா, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவுபடுத்த விரும்புகிறோம் என்று கூறினார். இதன் மூலம், த.வெ.க.வை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பதற்கான கதவைத் திறந்தே வைத்திருப்பதாக அவர் சூசகமாகத் தெரிவித்தார்.
விஜயுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துகிறதே? என்ற கேள்விக்கு அமித் ஷா, அனைவரும் பேச முயற்சிப்பதில் என்ன தவறு? எனவும் பதிலளித்தார்.
அனைத்துக் கட்சிகளும் விஜயுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டுவது, தமிழக அரசியலில் த.வெ.க-வின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நேற்று (அக். 29) த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
