கிண்டி வேளாண்மைத் துறை அதிகாரியின் அதிர்ச்சி செயல்: கழிவறை வழியாக லஞ்சப் பணத்தை வெளியேற்ற முயற்சி; மூத்த அதிகாரி சுவர் ஏறித் தப்பியோட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் (DVAC) தமிழகம் முழுவதும் சிறப்புச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரிய அலுவலகத்தில் நடந்த சோதனையில், லஞ்சப் பணத்தைக் கழிவறைக்குள் போட்டு அழிக்க முயன்ற அதிகாரி ஒருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டியில் உள்ள மாநில வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனையை மேற்கொண்டனர்.
சோதனை நடந்துகொண்டிருந்தபோது, ஒரு குரூப்-I அதிகாரி கழிவறைக்குள் சென்று, தன்னிடமிருந்த கணக்கில் வராத பணத்தை அங்கிருந்த மேற்கத்திய கழிவறையில் (Western Toilet) போட்டு, 'பிளஷ்' (Flush) செய்து அதை அழிக்க முயன்றார்.
சந்தேகமடைந்த லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை வெளியே வரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று சோதனையிட்டபோது, நீரில் மூழ்கிய ரூபாய் நோட்டுகளைக் கண்டறிந்தனர். வெளியாட்களின் உதவியுடன் கழிவறைக்குள் சிக்கியிருந்த ₹39,000-க்கும் அதிகமான பணம் மீட்கப்பட்டது.
மேலும், சோதனையின் போது மற்றொரு மூத்த அதிகாரி தனது வாகனத்தை அலுவலகத்திலேயே விட்டுவிட்டு, சுவர் ஏறி குதித்து வளாகத்திலிருந்து வெளியேறி தப்பிச் சென்றுவிட்டார் என்றும் தெரியவந்துள்ளது. பல மணி நேரம் நடந்த இந்தச் சோதனையின் முடிவில், ஒட்டுமொத்தமாக ₹4.73 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகை பரிசு' என்ற பெயரில் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொதுமக்களிடமிருந்து லஞ்சம் கேட்பதாகவும், ஒப்பந்ததாரர்கள் பரிசுகள் என்ற பெயரில் லஞ்சம் கொடுப்பதாகவும் பல புகார்கள் வந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறையால் அக்டோபர் 15 அன்று மாநிலம் தழுவிய அளவில் சிறப்பு ஆபரேஷன் (Special Operation) தொடங்கப்பட்டது.
இந்த நடவடிக்கையின் முதல் இரண்டு நாட்களில், தமிழகம் முழுவதும் 37 அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு, மொத்தம் ₹37,74,860 (₹37.74 லட்சம்) கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அரசு ஊழியர்கள் பொதுமக்களை மிரட்டி லஞ்சம் கேட்பது, மற்றும் தொழிலதிபர்கள் சட்டவிரோதமாகப் பணத்தைக் கொடுப்பது போன்ற புகார்களை ஒழிக்கும் நோக்கில் இந்தச் சிறப்புச் சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிகிறது.