தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற இளைஞர்களால் இடையூறு: போக்குவரத்துக் காவலர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்!
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு, சுமார் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென நடனமாடி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ரெட்டேரியிலிருந்து புறப்பட்ட ஒரு குழுவைச் சேர்ந்த சில இளைஞர்கள், அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள சிக்னலில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் திடீரெனத் தாங்கள் வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களைச் சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு, நடுச் சாலையில் நின்று நடனமாடியும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டுள்ளனர்.
இளைஞர்களின் இந்தச் செயலால் அரும்பாக்கம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்துக் காவலர்கள், நீண்ட நேரமாக அந்த இளைஞர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னரே, இளைஞர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
