ஆந்திராவின் காக்கிநாடா அருகே நாளை கரையை கடக்கிறது: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
சென்னை, அக்டோபர் 27: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், மொந்தா (Montha) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தற்போது சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய ஒன்பது துறைமுகங்களில் இன்று 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மொந்தா புயல் நேற்று (அக்.26) இரவு 11:30 மணியளவில் வலுப்பெற்றது. இது தற்போது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்தப் புயல் தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையிலேயே நகர்ந்து, நாளை (அக். 28) அன்று தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
புயல் கரையை கடக்கும் நேரத்தில், மணிக்கு 110 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மொந்தா புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும், அதன் காரணமாக வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
 

