நாற்று நட்ட கைகளில் நெல்லைப் பிடித்தபோது வேதனை உணர்ந்தேன் - லாக்கப் மரணங்களைத் தடுக்காதது, மழையில் சினிமா பார்த்தது குறித்து EPS கேள்வி!
டெல்டா மாவட்டங்களில் மழையால் நெல்மணிகள் முளைத்து விவசாயிகள் பாதிப்படைந்திருக்கும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழுநேர சினிமா விமர்சகராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் டெல்டா பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி, இது குறித்துப் பேசுகையில், நாற்று நட்ட கைகளில், மழையில் நனைந்து முளைத்திருந்த நெல்லைப் பிடித்தபோது, விவசாயிகளின் விவரிக்க முடியாத வேதனையை உணர்ந்தேன் என்று தனது வேதனையைப் பதிவு செய்தார்.
விவசாயிகளின் துயரங்களைக் கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் ஸ்டாலின் சினிமா பார்ப்பதைக் கடுமையாக விமர்சித்துப் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இந்த நெல்லைப் பிடித்திருக்க வேண்டிய முதலமைச்சரின் கை, படக்குழுவினரின் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறது. தான் எதற்கு முதல்வர் ஆனோம் என்பதையே மறந்துவிட்டு, முழுநேர சினிமா விமர்சகராக முதலமைச்சர் ஸ்டாலின் மாறிவிட்டார் என்பது கவலை அளிக்கிறது என்று சாடினார்.
ஜெய் பீம் படம் பார்த்து உள்ளம் உலுக்கியவர், தன் ஆட்சியில் தொடர்கதையாக நடைபெறும் அஜித் குமார் போன்ற லாக்கப் மரணங்களைத் தடுப்பதற்கு ஏதேனும் நடவடிக்கை எடுத்தாரா? என்று கேள்வி எழுப்பினார்.
தென் தமிழகம் மழையில் மிதந்தபோது, கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக டெல்லி பறந்தவர் தானே நீங்கள்? தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது ‘கூலி’ திரைப்படம் பார்த்தவர் தானே நீங்கள்?
அதேபோல இப்போதும், மழையால் நெல் முளைத்துப் போய், தாங்கள் உழைத்துப் பயிரிட்ட விவசாயிகளின் துயரங்கள் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல், ‘பைசன்’ படம் பார்க்க மணிக்கணக்கில் நேரம் செலவழித்து வருகிறீர்கள்.
பருவமழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க முதலமைச்சருக்கு நேரம் இருந்ததா என்றும் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதுவரை 31 உயிர்கள் பருவமழையால் இழந்திருக்க, மழை மற்றும் புயல் காலத்தில் மக்களைக் காப்பதற்கான உரிய நெறிமுறைகளை வகுப்பது பற்றி யோசிக்க நேரம் இருந்ததா?
விவசாயிகளின், மக்களின் கண்ணீரை உணராத இந்த குடும்ப மன்னராட்சியாளர்களுக்கு, மக்களாட்சியின் சக்தியை உணர்த்தப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
