கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புகார்; காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்து வழக்கறிஞர் கண்டனம்!
சென்னை, அக். 8: பிரபல சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, இன்று மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரியிடம் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே ஒன்றரை மாதத்திற்கு முன்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லாததால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினரும் வழக்கறிஞருமான சுதாவுடன் இணைந்து ஜாய் கிரிசில்டா இந்தப் புகாரைத் தாக்கல் செய்தார்.
காவல்துறையின் மெத்தனப் போக்கு குறித்துக் குற்றச்சாட்டு
மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர் சுதா, காவல்துறையின் செயல்பாடு குறித்துப் பல அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார்:
நடவடிக்கை இல்லை: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து ஒன்றரை மாதமாகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகார் எந்தக் காவல் நிலையத்திற்குச் சென்றது என்பதே தெரியவில்லை.
விசாரணை குளறுபடி: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவில் (WCCB) புகார் கொடுத்த பின், துணை ஆணையர் விசாரணை நடத்தியுள்ளார். ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ்ஜை போலீசாரே துணை ஆணையர் அலுவலகத்தின் பின் வழியாக ரகசியமாக அனுப்பி வைத்ததாகத் தகவல் வந்ததாகவும், ரங்கராஜிடம் முறையான விசாரணை நடந்ததாகத் தெரியவில்லை என்றும் சுதா குற்றம்சாட்டினார்.
காலதாமதம்: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டு, குழந்தையைக் கொடுத்துவிட்டு ரங்கராஜ் ஒன்றும் தெரியாதபோல இருக்கிறார். ஆனால், காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாகப் புகார்
வழக்கறிஞர் சுதா, மாதம்பட்டி ரங்கராஜ் மீது மற்றொரு பரபரப்புக் குற்றச்சாட்டையும் முன்வைத்தார். மாதம்பட்டி ரங்கராஜ், 10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்துவிட்டதாக எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளது. ஏமாற்றப்பட்ட மற்ற பெண்களும் எங்களை அணுகியுள்ளனர். அதற்கான ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம்," என்று அவர் தெரிவித்தார்.
ஜாய் கிரிசில்டாவின் அச்சம்
இதையடுத்துப் பேசிய ஜாய் கிரிசில்டா, தனது உயிருக்கும் தனது பிள்ளைக்கும் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அதற்கு முழுமுதற்காரணம் மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்று பகிரங்கமாகத் தெரிவித்தார்.
காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தற்போது மகளிர் ஆணையத்தில் அளிக்கப்பட்ட இந்த புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
