டிச. 12 வரை மிதமான மழை நீடிக்கும்: தென் தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தொடர்ந்து டிசம்பர் 12ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. தென் கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சியே இதற்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இன்று கடலோரத் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24C ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30C ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24C ஒட்டியும் இருக்கக்கூடும்.
டிசம்பர் 8 முதல் 12 வரை:டிசம்பர் 8ஆம் தேதி முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 8, 2025 முதல் டிசம்பர் 10, 2025 வரை: தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, இந்தச் சமயத்தில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
