குப்பைக் கழிவுகளால் நிலத்தடி நீர் அபாயம்; கூட்டணி குறித்துத் தலைவர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்!
திருப்பூரின் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குளறுபடிகள் குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். திருப்பூர் மாநகராட்சியின் குப்பைகள் கொட்டப்படும் முதலிபாளையம் பாறைக்குழியைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுங்கட்சியைக் கடுமையாகச் சாடினார்.
திருப்பூர் மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்துக் குற்றம் சாட்டிய அருண்ராஜ், "ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற திருப்பூர் நகரம் இன்று சுற்றுச்சூழல் சீர்கெட்ட நரகமாக மாற்றப்பட்டுள்ளது. 28 சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்தும் எதுவும் முறையாக இயங்குவதில்லை. குப்பைகளை அகற்றத் தனியார் நிறுவனங்களுக்குக் கிலோ 4 ரூபாய் என ஒப்பந்தம் கொடுத்துவிட்டு, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு திமுகவினர் புலி வாலை பிடித்துவிட்டனர். குப்பைகளை முறையாகச் சுத்திகரிக்காமல் பாறைக்குழியில் கொட்டுவதால், அப்பகுதியின் நிலத்தடி நீரில் டி.டி.எஸ் (TDS) அளவு ஒரு லட்சம் என்ற அபாய நிலையை எட்டியுள்ளது. இது பொதுமக்களுக்குக் கடும் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும். திருப்பூர் மாவட்டத்தை திமுக அரசு திட்டமிட்டுப் புறக்கணித்து வருகிறது" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்துப் பேசிய அவர், "தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் விஜய் அவர்கள் விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார். யாரை முதலமைச்சராக ஏற்பார்களோ, அவர்களுடனேயே கூட்டணி அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்றார். மேலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) மூலம் யாருடைய வாக்குரிமையும் பறிக்கப்படுவதைத் தவெக அனுமதிக்காது என்றும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேட இரு கட்சிகளும் (திமுக மற்றும் பாஜக) முயல்வதாகவும், அமைதியான தமிழகத்தில் இவர்கள்தான் பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்றும் அருண்ராஜ் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
