மதுரையில் அனல் பறக்கும் தேர்தல் களம்: சேடபட்டியார் மகனை ஜெயிக்க வைக்க திமுக தீவிரம் - முகாமிட்டு அட்டாக் செய்யும் அதிமுக!
மதுரை: தமிழக தேர்தல் வரலாற்றில் ‘திருமங்கலம் பார்முலா’ என்றாலே ஒரு தனி ‘வைப்’ உண்டு. வரும் சட்டமன்றத் தேர்தலில் மதுரையின் விஐபி தொகுதியான திருமங்கலத்தில் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பமாகியுள்ளது. 2009 இடைத்தேர்தலுக்குப் பிறகு இந்தத் தொகுதியில் வெற்றிக்கனியைச் சுவைக்காத திமுக, இந்த முறை எப்படியாவது ‘கம்பேக்’ கொடுக்க வேண்டும் என வெறியோடு களமிறங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தனது கோட்டையைத் தக்கவைத்து ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுவாரா அல்லது முதல்வரின் மருமகன் சபரீசனின் வியூகத்தில் திமுக வேட்பாளர் மணிமாறன் வெற்றி வாகை சூடுவாரா என்ற ‘டென்ஷன்’ இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது.
அதிமுக தரப்பில் ஆர்.பி. உதயகுமார் செம ‘ஸ்ட்ராங்’ ஆக உள்ளார். கடந்த ஓராண்டாகவே தொகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், கோவில் திருவிழாக்கள், கட்சி இல்ல விழாக்கள் என எதையும் மிஸ் செய்யாமல் ‘ஸ்பாட்’டுக்குச் சென்று மக்களைக் கவனித்து வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது அதீத விசுவாசம் கொண்ட உதயகுமார், டி.குன்னத்தூரில் அம்மாவுக்காகக் கட்டிய நினைவு மண்டபத்திலேயே தற்போது முகாமிட்டுத் தேர்தல் வேலைகளைப் பார்த்து வருகிறார். “பூத் கமிட்டி முதல் பொது மக்கள் வரை எல்லாமே என் கைக்குள்” என கெத்தாக வலம் வரும் உதயகுமாருக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கான களம் என்பதால் அதிமுகவினர் செம ‘ஜோஷ்’சில் உள்ளனர்.
மறுபுறம், திமுக இந்த முறை ‘ரிஸ்க்’ எடுக்கத் தயாராக இல்லை. முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் மகன் மணிமாறனை வேட்பாளராகக் களமிறக்கி, அவருக்குப் பின்னால் முதல்வரின் மருமகன் சபரீசனே நேரடியாக ‘என்ட்ரி’ கொடுத்துள்ளார். தொகுதி நிர்வாகிகளுக்கு ரகசிய ஆலோசனைகள், தேர்தல் வியூகங்கள் என சபரீசனின் ‘மாஸ்டர் பிளான்’ களத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறது. எப்படியாவது இந்தத் தொகுதியை திமுக வசமாக்க வேண்டும் என மணிமாறனும் பரிசுப் பொருட்கள், ‘பிரியாணி’ ட்ரீட் என ஆர்.பி. உதயகுமார் பாணியிலேயே ‘அட்டாக்’ செய்யத் தொடங்கிவிட்டார்.
‘கவனிப்பு’ விஷயத்தில் திமுக தாராளம் காட்ட முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், “அவர்கள் என்ன செய்தாலும் நாங்கள் ஒரு படி மேலாகவே கவனிப்போம்” எனத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் உதயகுமார். இதனால் திருமங்கலம் தொகுதி இப்போதே ஒரு இடைத்தேர்தல் ரேஞ்சுக்கு ‘ஹைப்’ ஆகிவிட்டது. அதிகாரிகளின் சோதனைகள் ஒருபுறம் தீவிரமானாலும், திமுகவினர் பக்கம் அதிகாரிகள் கொஞ்சம் ‘பயத்துடனேயே’ அணுகுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ‘பவர்ஃபுல்’ மோதலில் திருமங்கலத்து மக்கள் யாருக்கு ‘ஓகே’ சொல்லப்போகிறார்கள் என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
வாக்காளர்களைக் கவரும் வித்தையில் இரு தரப்பும் ‘விறுவிறு’ப்பாகச் செயல்படுவதால், மதுரை மாவட்ட அரசியலே திருமங்கலத்தை நோக்கித் திரும்பியுள்ளது. பண பலம், ஆள் பலம், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த இந்தத் தேர்தல் யுத்தத்தில் இறுதிச் சிரிப்பு யாருடையது என்பது வாக்கு எண்ணிக்கை அன்றே தெரியும். அதுவரை திருமங்கலத்தில் நிலவும் இந்தத் தேர்தல் ‘பீவர்’ குறைய வாய்ப்பே இல்லை.
