இன்டர்ன்ஷிப் வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்; செல்போனைப் பறிமுதல் செய்து பிசியோதெரபிஸ்ட் கார்த்திக்கிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை!
தலைநகர் சென்னையில் மருத்துவப் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவி ஒருவரை, பிசியோதெரபிஸ்ட் மருத்துவரே மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் மருத்துவ உலகையே தலைகுனிய வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் பெரம்பூரைச் சேர்ந்த டாக்டர் கார்த்திக் (27) என்பவரை அனைத்து மகளிர் போலீசார் 'கையை முறுக்கி' அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பிசியோதெரபி இறுதியாண்டு பயின்று வருகிறார். இவர் தனது இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காகப் பெரம்பூரில் உள்ள டாக்டர் கார்த்திக்கிற்குச் சொந்தமான பீடியாட்ரிக் மருத்துவமனையில் கடந்த 17-ஆம் தேதி பணியில் சேர்ந்துள்ளார். அங்கு நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் பயிற்சியும் அந்த மாணவிக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி ஒரு நோயாளிக்கு மசாஜ் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறி, மாணவியைக் கொளத்தூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு டாக்டர் கார்த்திக் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சென்றதும் மாணவியிடம் பேச்சு கொடுத்த கார்த்திக், குளிர்பானத்தை அருந்தக் கொடுத்துள்ளார். அந்தப் பானத்தைக் குடித்த சில நிமிடங்களிலேயே மாணவி நிலைகுலைந்து மயக்கமடைந்துள்ளார். மயக்கம் தெளிந்து பார்த்தபோது, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை அறிந்து மாணவி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கதறி அழுது முறையிடவே, உறவினர்கள் அந்த மருத்துவமனைக்குத் திரண்டு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கைக் கைது செய்தனர். அவரிடமிருந்த செல்போனைப் பறிமுதல் செய்துள்ள புலனாய்வுத் துறையினர், இதேபோல வேறு பெண்களையும் அவர் வலையில் வீழ்த்திச் சீரழித்துள்ளாரா என்ற கோணத்தில் 'ஸ்கேன்' செய்து வருகின்றனர்.
