துரோகங்களை வென்று அரசனான இளைஞனின் கதையைச் சொல்லி தவெக தலைவர் விஜய்யின் குட்டிக்கதை! தவெக 100% மதச்சார்பற்ற பாதையில் பயணிக்கும் என உறுதி!
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டுத் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இன்று குழந்தைகளுடன் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடினார். அரசியல் களத்தில் தவெக-வின் நிலைப்பாடு குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் சூழலில், இந்த விழாவில் அவர் பேசிய 'குட்டிக்கதை' மற்றும் வழங்கிய உறுதிமொழி அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்குக் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கி, அவர்களுடன் கேக் வெட்டி மகிழ்ந்த விஜய், பின்னர் மேடையில் பேசுகையில் ஒரு தீர்க்கமான கதையைக் குறிப்பிட்டாரார். "ஒரு இளைஞனுக்கு எதிராக அவனது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டுப் பாழும் கிணற்றில் தள்ளிவிட்ட கதை ஒன்று உண்டு. அந்த இளைஞன் அங்கிருந்து மீண்டு வந்து, அந்த நாட்டுக்கே அரசனாகி, துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமல்ல அந்த நாட்டையும் காப்பாற்றினான். அந்தக் கதை யாரைப் பற்றியது என்று நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. எவ்வளவு பெரிய எதிரிகளையும் நாம் வெல்லலாம் என்ற உறுதியை அந்தக் கதைகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. மக்களை மானசீகமாக நேசிப்பவர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள்" என்று ‘கறார்’ ஆகப் பேசினார். இது மறைமுகமாகத் தன்னைச் சுற்றிப் பின்னப்படும் அரசியல் சூழ்ச்சிகளுக்கான பதிலடி என்றே பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து தனது கட்சியின் கொள்கை குறித்துப் பேசிய அவர், "சமூக மற்றும் சமய நல்லிணக்கத்தைக் காப்பதில் நானும், தமிழக வெற்றி கழகமும் 100 சதவீதம் உறுதியாக இருப்போம் என இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். நமது பயணம் எப்போதும் மதச்சார்பற்ற சமூகநீதி பாதையிலேயே இருக்கும். கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும், அது நம்மைச் சரியான திசையில் வழிநடத்தும்" என்று நம்பிக்கையுடன் உரையை முடித்துக் கொண்டார். முன்னதாக குழந்தைகளுக்கு அவர் கேக் ஊட்டிவிட்ட நெகிழ்ச்சியான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

.jpg)
