600 பக்தர்களை அழைத்துச் செல்லத் திட்டம்; அக்டோபர் 22 கடைசி நாள்! - தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!
ராமேசுவரம், செப்டம்பர் 25: ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள, தகுதியுடைய 600 பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அக்டோபர் 22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து, காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர். பயணச் செலவை அரசே ஏற்றுக்கொள்கிறது. கடந்த ஆண்டுகளில் 200 முதல் 420 பேர் வரை இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
யார் விண்ணப்பிக்கலாம்?
* விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
* வயது 60 முதல் 70-க்குள் இருக்க வேண்டும்.
* ஆண்டு வருமானம் ₹2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பயணத்துக்குத் தகுதியானவர்கள், அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து தலா 30 பேர் வீதம் 600 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பப் படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் இருந்து நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் அக்டோபர் 22-ஆம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறநிலையத் துறை அறிவித்துள்ளது. இந்தப் பயணம் காசியில் இருந்து மீண்டும் ராமேசுவரம் வந்த பின்னரே நிறைவுபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.