அக்டோபர் 11-ல் தேர்வு; ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்!
சென்னை, செப்டம்பர் 25: தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்கள், தேர்வுத் துறை சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, 2022-ஆம் ஆண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு மாதந்தோறும் ₹1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 சதவீதம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.
நடப்பாண்டுக்கான திறனறித் தேர்வு வரும் அக்டோபர் 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4 வரை நடைபெற்றது. தற்போது, தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களுக்கான பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாட்கள் மற்றும் ஹால் டிக்கெட்கள் தேர்வுத் துறையின் இணையதளமான dge.tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இந்த ஹால் டிக்கெட்களைப் பதிவிறக்கம் செய்து, மாணவர்களின் ஹால் டிக்கெட்டில் கையொப்பமிட்டு, பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும் என தேர்வுத் துறை சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், ஹால் டிக்கெட்டில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு மையினால் திருத்தி சான்றொப்பமிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.