திமுக ஆட்சியால் கல்வித்துறை சீரழிந்தது; ₹1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு வாக்குறுதி என்ன ஆனது? அன்புமணி குற்றச்சாட்டு! Education Sector Decayed: Anbumani questions DMK on ₹1 Lakh Crore fund promise in Trichy

52 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லக் காரணம் என்ன? நேரு - காந்தி நோட்டுக் கிண்டல்" - மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் பா.ம.க. தலைவர்!

திருச்சி, செப்டம்பர் 26: தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற பெயரில் 100 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், இன்று திருச்சியில் மேற்கொண்ட நடைப்பயணத்தின்போது, தி.மு.க. அரசின் கல்வி நிர்வாகம் மற்றும் நீர் மேலாண்மையைக் கடுமையாகச் சாடிப் பேசினார். மேலும், போதைப்பொருள் நடமாட்டம், கிட்னி திருட்டு உள்ளிட்ட விவகாரங்களில் அரசின் செயல்பாடுகளையும் அவர் கடும் விமர்சனத்திற்குள்ளாக்கினார்.

கல்வித்துறையின் சீரழிவு குறித்து அன்புமணி ஆவேசம்:

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கவில்லை" என்று மு.க.ஸ்டாலின் சொல்வதை மறுத்த அன்புமணி, இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாகச் சவால் விடுத்தார். அவர் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்:

ஆசிரியர்கள் பற்றாக்குறை: தமிழ்நாட்டில் கல்வித்துறை சீரழிந்துவிட்டது. சுமார் 4,000 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஒரு லட்சம் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கிடையாது. இதை வைத்துக்கொண்டு தமிழ்நாடு கல்வியில் சிறந்தது என்று எப்படிச் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

தனியார் பள்ளிகள் மீது மோகம் ஏன்?: தமிழ்நாட்டில் இன்று 37,500 அரசுப் பள்ளிகளில் 52 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால், 12,500 தனியார் பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். தரமான கல்வி அரசுப் பள்ளிகளில் கொடுத்தால், மாணவர்கள் ஏன் தனியார் கல்வியை நோக்கிச் செல்லப் போகிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

வாக்குறுதி மீறல்: "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கல்வித்துறைக்கு மட்டும் ₹1 லட்சம் கோடி ஒதுக்குவோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், தற்போது வெறும் ₹46,000 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளனர். இது அ.தி.மு.க. ஆட்சியைவிட வெறும் ₹12,000 கோடி மட்டுமே அதிகம். வாக்குறுதி ஏன் நிறைவேற்றப்படவில்லை?என்று சாடினார்.

உயர்கல்வியிலும் அவலம்: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 100 கல்லூரிகளில் முதல்வர்கள் இல்லை. 1.36 லட்சம் காலியிடங்களில் 40,000 இடங்கள் காலியாக இருக்கக் காரணம் என்ன? பேராசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சேரத் தயங்குகிறார்கள்.

அமைச்சர் நேருவை கிண்டல் செய்த அன்புமணி:

அரசியல் களத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தும் வகையில், திருச்சி அமைச்சர் கே.என்.நேருவை மறைமுகமாகக் கிண்டல் செய்தார் அன்புமணி.

அந்தக் காலத்தில் காந்திக்கும், நேருவுக்கும் சம்பந்தம் இருந்தது போலவே, திருச்சியில் இருக்கும் அமைச்சர் நேருவுக்கும் காந்திக்கும் கூடச் சம்பந்தம் இருக்கிறது. திருச்சி நேரு தேர்தல் நேரத்தில் மக்களின் வாக்குகளைப் பெற நிறைய 'காந்தி நோட்டுகளை' (பணத்தை) கொடுப்பார். திருச்சி நேருவுக்கும் காந்திக்கும் அந்த ஒரு சம்பந்தம் மட்டுமே உள்ளது" என்று கிண்டல் செய்தார்.

கிட்னி திருட்டுக் குற்றச்சாட்டு:

மண், மலை, கிரானைட் கொள்ளையைப் போல இப்போது கிட்னியைத் திருட ஆரம்பித்துவிட்டதாக அவர் கடும் விமர்சனம் செய்தார்.

"நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் நெசவுத் தொழில் செய்யும் வறுமையில் உள்ளவர்களின் கிட்னியைத் திருடியதில் தி.மு.க.வினர் தான் ஈடுபட்டார்கள் என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் உரிய விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதும், அதனை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்று மேல்முறையீடு செய்கிறது. குற்றம் செய்தவனைப் பாதுகாப்பதற்காக அரசு உச்ச நீதிமன்றம் செல்வது மானங்கெட்ட செயல்" என்று அவர் கடுமையாகச் சாடினார்.

போதைப்பொருள் மற்றும் நீர் மேலாண்மை:

கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டதாகவும், இதைத் தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வருவதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார். மேலும், நீர் மேலாண்மை என்றால் என்னவென்றே தி.மு.க. அரசுக்குத் தெரியவில்லை என்றும், காவிரி குண்டாறு திட்டம் போன்ற முக்கிய நீர்ப் பாசனத் திட்டங்களை நிறைவேற்றத் தி.மு.க. அரசு தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

Durex Condoms

"நீங்கள் நம்பும் பாதுகாப்பு" - இப்போதே வாங்குங்கள்!