இனி மறைந்த தலைவர்களைப் பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்; சுகாதாரத் துறை 'கோமா ஸ்டேஜ்' என்று குற்றச்சாட்டு!
சென்னை: சி. பா. ஆதித்தனார் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் திமுக தலைமையிலான மாநில அரசின் சுகாதாரம் குறித்த செயல்பாடுகள் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
சீமான் மீதான விமர்சனம்
நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் குறித்துப் பேசிய ஜெயக்குமார், சனியில் பல்வேறு வகைகள் உள்ளது. எல்லா சனியும் ஒட்டுமொத்தமாக சேர்த்த உருவம் தான் சீமான் என்று கடுமையாக விமர்சித்தார்.
அதே சமயம், தனக்கு சீமான் மீது நல்ல அபிப்பிராயம் உள்ளது. அவர் மறைந்த தலைவர்களைப் பற்றி கொச்சைப்படுத்திப் பேசுகின்ற வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற ஈனச் செயல்களை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இனிமேல் எம்ஜிஆர், ஜெயலலிதா பற்றிப் பேசுவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அவரை விட நன்கு பேசத் தெரிந்தவர்கள் தங்கள் கட்சியில் இருக்கிறார்கள். ஆனால், அதுபோல நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம் என்று எச்சரித்தார். அப்படி மீறி விமர்சித்தால் தங்களது பதிலடி மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை கோமா ஸ்டேஜ்
மாநில அரசின் சுகாதாரத் துறை செயல்பாடுகள் குறித்துப் பேசிய ஜெயக்குமார், அண்மையில் தனக்கு ஏற்பட்ட காய்ச்சல் குறித்துப் பேசினார்.
காய்ச்சல் காரணமாக ஐந்து நாட்கள் படாத பாடு பட்டுவிட்டேன். கொரோனா காலத்தில் கூடத் தான் களத்தில் இறங்கி வேலை செய்ததாகவும், தனக்கு வந்தது ஃப்ளூ, இன்ஃப்ளூயன்சா, காய்ச்சலா அல்லது ஜுரமா என என்னவென்றே தெரியவில்லை என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் பாதி மக்கள் தொகைக்கு மேல் ஃப்ளூ, இன்ஃப்ளூயன்சா தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு அரசு தற்போதுதான் விழித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப டுத்துவதற்கு மாஸ்க் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அரசு தவறிவிட்டது என்று சாடினார்.
மேலும், தமிழ்நாட்டில் பொம்மை அரசாங்கம் நடைபெற்று வருவதாகவும், இதனால் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை கோமா ஸ்டேஜிற்குச் சென்று விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மக்களை விழிப்புணர்வு செய்யவே தான் இன்று மாஸ்க் அணிந்து வந்ததாகவும், இந்த அரசு நம்மைப் பாதுகாக்காது, நாம்தான் நம்மைக் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்" என்றும் ஜெயக்குமார் கூறினார்.