விஜய் பரப்புரையில் மக்கள் வெள்ளத்திற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது - உயிரிழந்த குடும்பங்களைச் சந்திக்க கரூர் பயணம்!
சென்னை, செப். 28: கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் குறித்துத் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், இந்தச் சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணம் என்று விமர்சித்துள்ளார்.
கரூர் புறப்பட்டுச் செல்வதற்காகச் செனனை விமான நிலையம் வந்த பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
குறைந்த போலீஸ் பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டு
விஜய் பிரசாரத்தில் பெரிய மக்கள் வெள்ளம் இருந்தும், அதற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு என்பது மிக மிகக் குறைவாகவே இருந்தது. மேலும், கரூர் முழுவதும் மின்சாரம் தடை செய்யப்பட்டிருந்தது. கூட்ட நெரிசலுக்கு நடுவில் ஆம்புலன்ஸ் வந்ததால்தான் பெரிய பிரச்சினைக்குக் காரணமாகிவிட்டது" என்று அவர் குற்றம் சாட்டினார்.
மரணத்தில் அரசியல் பேசுவதை விட உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய பிரேமலதா, நேரடியாகக் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களையும் குடும்பங்களையும் சந்திக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
மனதைக் கஷ்டப்படுத்தும் சம்பவம்
இந்தச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்த அவர், இந்தச் சம்பவம் தவறான முன்னுதாரணம். இது மாதிரி இனி நடக்கக் கூடாது. நான் கேப்டன் (விஜயகாந்த்) கூட இருந்தவள். 1990-ல் திருமணமானபோதே பெரிய கூட்டத்தோடு சென்றிருக்கிறேன். ஆனால், கரூர் சம்பவம் எல்லோருக்கும் மனதைக் கஷ்டமாக இருக்கிறது. குழந்தைகள், பெண்கள் இருந்திருக்கிறார்கள். இது துயரமான சம்பவம். தமிழகத்தில் நடந்துள்ள இந்த வேதனையான நிகழ்வுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
கரூருக்கு நேரில் சென்று உண்மை நிலை என்ன என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் விரிவாகப் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.