வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை 24 மணிநேரமாக அனுபவிக்கிறேன்.. உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு உறவாக இருப்பேன் என உருக்கம்!
தலைமறைவுத் தகவல் வெளியான நிலையில், 24 மணி நேரத்துக்குப் பிறகு முகநூலில் வேதனைப் பதிவு; இறந்த குடும்பங்களுக்கு உறவாகவே என் வாழ்க்கை இருக்கும் என உறுதி!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அவர்கள் ஆழ்ந்த வேதனையுடன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை: கரூர் மக்கள் சந்திப்புப் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குப் பிறகு தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை நள்ளிரவில் வெளியிட்டுள்ளார்.
கரூர் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணையை முடுக்கிவிட்டுள்ள நிலையில், ஆதவ் அர்ஜூனாவின் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது. இதற்குத் தவெக தலைமை நிலையம் மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், அவரது இந்தக் கடிதம் வெளியாகியுள்ளது.
ஆதவ் அர்ஜூனாவின் உருக்கமான பதிவு:
தனது முகநூல் பதிவில் ஆதவ் அர்ஜூனா மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருப்பதாவது:
என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தைக் கடந்த இருபத்தி நான்கு மணிநேரமாக அனுபவித்து வருகிறேன். இந்த மரணங்கள் என் நெஞ்சை இன்னும் உலுக்கிக்கொண்டு உள்ளது. மரணத்தின் வலியையும், அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றித் தவித்துவருகிறேன்.
தாயின் இழப்பை நினைவு கூர்ந்தார்:
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன். அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள். இந்த நிமிடம் வரை இந்தத் துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்தக் குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
குடும்பங்களுக்கு உறுதுணை:
இழப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்குத் தான் நிரந்தர உறவாக இருப்பேன் என்று அவர் உறுதி அளித்தார். "இறந்தவர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அண்ணனாக, தம்பியாக, மகனாக, அந்தக் குடும்பங்களின் கனவுகளையும், நம்பிக்கையையும் சுமந்து செல்லும் ஒரு உறவாகவே எனது வாழ்க்கை பயணம் இருக்கும் என்பதை, இறப்பின் வலியைச் சிறுவயதிலேயே உணர்ந்த ஒருவனாக உறுதியுடன் கூறுகிறேன்.
துயரமும், துக்கமும் மட்டுமே என் மனதைச் சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒரு உறவாய் என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளேன்.
இறுதியாக அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்! என்ற வாசகத்துடன் தனது உருக்கமான பதிவிட்டுள்ளார்.